வியாழன், 7 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம்




விஸ்வரூபம்... தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே உச்சரிக்கும் சினிமா.

கமலஹாசன் என்ற தமிழ் நடிகர் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கிய சர்வதேச படம். இந்திய உளவுப்பிரிவான 'ரா' அமைப்பின் அதிகாரி தலிபான் தீவிரவாதி வேடத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களின் ரகசிய திட்டங்களை அறிந்து அவற்றை தடுப்பதோடு அமெரிக்கா மீது தலிபான்கள் நடத்த இருந்த தாக்குதலையும் முறியடிப்பதே கதை...

அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் படமாக்கி தீவிரவாதிகளின் நடவடிக்கைகள், அவர்களின் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் விளைவுகளை கற்பனை கலந்து பிரமாண்டமாய் எடுத்துள்ளார் கமல்.

படத்தின் ஆரம்பம் அமெரிக்காவில் தொடங்குகிறது. கமலஹாசன் 'கதக்' நாட்டிய கலைஞர். அமெரிக்க பெண்களுக்கு நாட்டியம் கற்று கொடுக்கும் ஆசிரியராக இருக்கிறார். பெண்மை கலந்த நளின நடை, ஆண்மையை வெளிகாட்டாத கதாபாத்திரமாக காட்சி அளிக்கிறார்.

இவரது மனைவி பூஜாகுமார். அமெரிக்காவில் உள்ள அணு மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். கமல்-பூஜா இருவரும் கணவன்-மனைவி என்றாலும் அந்தரங்க உறவுகள் எதுவும் நடப்பதில்லை. இது மனைவி பூஜாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கணவனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதால் தன்னை தொட தயங்குகிறாரோ? என்று எண்ணுகிறார். இதை கண்டுபிடிக்க துப்பறியும் நிபுணரை நியமிக்கிறார். அவர் கமலஹாசனை பின் தொடர்கிறார். அப்போது கமலஹாசன் உண்மையில் ஒரு நடன கலைஞர் இல்லை என்பதும் அவர் ஒரு முஸ்லிம் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.

இதற்கிடையே அமெரிக்காவில் அணு கதிர்கள் மூலம் தாக்குதல் நடத்த தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டு அதற்கான காய் நகர்த்தல்களில் ஈடுபடுகின்றனர். இதற்காக அமெரிக்காவின் அணு விஞ்ஞானிகளை தேடி அலைந்தபோது, அவர்களின் கையில் கமலஹாசனை துப்பறிந்த நிபுணர் சிக்கிக் கொள்கிறான். அவனிடம் இருக்கும் ஆவணங்கள் மூலம் கமலஹாசனின் மனைவி பூஜாகுமார் ஒரு அணு விஞ்ஞானி என்பதை தெரிந்து கொண்ட தீவிரவாதிகள் துப்பறியும் நிபுணரை சுட்டுக்கொன்று கமலஹாசனையும் பூஜாகுமாரையும் தங்களது ரகசிய இடத்திற்கு கடத்தி செல்கிறார்கள்.

அங்கு பூஜாகுமாரிடம் அணு ரகசியங்களை கேட்கிறார்கள். அவர் சொல்ல மறுக்கவே தீவிரவாதிகள் சித்ரவதை செய்கிறார்கள். இதை பார்த்ததும் கமல் கொதித்து எழுகிறார். அங்கிருந்த தீவிரவாதிகளை அடித்து நொறுக்குகிறார். அவரது ஆக்ரோஷமான சண்டையை பார்த்ததும் மனைவிக்கு பிரமிப்பு... நடன கலைஞராக இருந்த கமலுக்குள் இப்படி ஒரு மறுபக்கமா? என வியப்படைகிறார்.

அதன் பின்புதான் கமல் யார்? என்ற உண்மை அவருக்கு தெரிய வருகிறது. அது படத்தின் 'பிளாஷ்பேக்' கதையாக விரிகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘ரா’ அதிகாரி கமல், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைகிறார். அங்கு முல்லா உமரை சந்திக்கிறார். கமலின் திறமைகளை பார்த்த முல்லா உமர் இளம் தலிபான்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணராக கமலை நியமிக்கிறார்.

உருது மொழி தெரியாத கமல், பயிற்சி பெறும் சக வீரர்களிடம் கேட்டு அங்கு உள்ள தலிபான் தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறார். ஆப்கான் தீவிரவாதிகள் புறாக்களின் கால்களில் அணுக்கதிர்களை பதுக்கி அமெரிக்காவின் நியூயார்க் நகர் மீது மிகப்பெரிய அணுக்கதிர் தாக்குதல் நடத்த திட்டமிடும் தகவல் தெரிய வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாளும் ஆப்கானிஸ்தானில் இருந்து புறாக்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது.

போதுமான அணுக்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதும் அங்கு தாக்குதல் நடத்த வேண்டிய தலிபான்களும் அமெரிக்கா செல்கிறார்கள். இந்த தகவல் அமெரிக்காவின் உளவுப்படையான எப்.பி.ஐ.க்கு தெரிகிறது. மிரண்டு போன அவர்கள் நேட்டோ படைகள் மூலம் ஆப்கானிஸ்தான் மீது வான்வெளி தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் அங்கிருந்த முல்லா உமரை தவிர மற்ற தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள். முல்லா உமர் மட்டும் அமெரிக்காவுக்கு ரகசியமாக தப்பிச் செல்கிறார்.

இதுபோல கமலும் அமெரிக்காவுக்கு செல்கிறார். அங்கு எப்.பி.ஐ.யின் கையில் கமல் சிக்குகிறார். கமல் இந்தியாவின் 'ரா' அதிகாரி என்று இந்திய தூதரக அதிகாரிகள் எப்.பி.ஐ.க்கு தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் கமல் தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்காவை தகர்க்க என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளனர் என்பதை விவரிக்கிறார். அவர்கள் அந்த திட்டங்களை கமலுடன் சேர்ந்து தகர்த்து முறியடிக்கிறார்கள். தலிபான்களின் திட்டம் தோற்கடிக்கப்படுகிறது. அமெரிக்கா காப்பாற்றப்படுகிறது. அத்துடன் படம் முடிகிறது.

வணக்கம் போடுவதற்கு முன்பு முக்கிய தீவிரவாதியான முல்லா உமர் அமெரிக்காவை விட்டு தப்பிச் செல்கிறார். இவர் அடுத்து செய்யப்போகும் அதிரடிகள் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகும் என்ற அறிவிப்புடன் படம் முடிகிறது.

விஸ்வரூபம் படத்தில் 3 பாடல்கள் வருகிறது. கதக் கலைஞர்கள் பாடும் பாடலாக ஒன்றும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும்போது அதன் பின்னணியில் இசைக்கும் பாட்டாகவும், கமல் எதிரிகளை துவம்சம் செய்யும்போது பாடும் பாடலாகவும் உள்ளது.

படத்தின் பிரமாண்டம் படம் தொடங்கிய 25-வது நிமிடத்தில் நடக்கும் சண்டைக் காட்சி. வில்லன்களுடன் கமல் மோதுவது இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத விசித்திரமான சண்டை... இதை இன்னொரு முறை பார்க்க மாட்டோமா? என்று ரசிகர்களை நிச்சயம் துடிக்க வைக்கும். அதை உணர்ந்த இயக்குனர் கமல் அந்த சண்டைக்காட்சியை கதாநாயகி பூஜா மீண்டும் எண்ணிப்பார்ப்பதுபோல உருவாக்கி காட்சிப்படுத்தி உள்ளார்.

படத்தின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் அதன் ஒளிப்பதிவு... ஹாலிவுட் படங்களில் மட்டுமே கண்டு வந்த பிரமாண்ட காட்சிகள் விஸ்வரூபத்திலும் காண கிடைப்பது தமிழ் ரசிகர்களுக்கு மற்றொரு பரிசு. இசையை சங்கர்- ஹசான்-லாய் ஆகியோர் கூட்டாக செய்துள்ளனர்.

ஆப்கானையும், தலிபான்களையும் இவ்வளவு நுணுக்கமாக எந்த படத்திலும் பார்த்ததில்லை. நியூயார்க் நகரின் பிரமாண்டம் பிரமிக்க வைக்கிறது. புறா காட்சிகள் விறுவிறுப்பு. கமல் ஆக்ஷன், ஸ்டைலில் கலக்குகிறார். ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பம் காட்சிகளை நிஜப்படுத்துகிறது.

மொத்தத்தில் ‘விஸ்வரூபம்’ தமிழர்கள் பெருமைப்படும் வகையில், உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் சினிமா....

 நன்றி மாலைமலர் 





புதன், 6 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் போட்டி: சென்னையில் 30 திரையரங்கில் ரிலீஸ்

 
கமல் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் பல தடைகளை சந்தித்து நாளை (7-ந்தேதி) ரிலீசாகிறது. தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.

விஜய்யின் துப்பாக்கி படத்துக்குப்பின் மெகாஹிட் படங்கள் வராததால் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மத்தியில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னையில் 30 தியேட்டர்களில் இப்படத்தை திரையிடுகின்றனர். மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகிறது.

டிக்கெட் முன்பதிவுகள் நேற்று துவங்கின. பல தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. நடிகர், நடிகைகள் ‘விஸ்வரூபம்’ படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். நாளை முதல் காட்சிக்கு அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்கள்.

வில்லிவாக்கம், மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஏ.ஜி.எஸ். தியேட்டரில் 7 திரைகளில் 28 காட்சிகள் திரையிடப்படுகிறது. வடபழனி கமலா தியேட்டர் அசோக்நகர் உதயம் தியேட்டர்களில் ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. சத்யம் தியேட்டரில் ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவுகள் விறுவிறுப்பாக நடந்தன. ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் தியேட்டர்களில் நாளை போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழக எல்லையோர மாவட்டங்களில் உள்ள ரசிகர்கள் பலர் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிற்கு பஸ், வேன், கார்களில் சென்று விஸ்வரூபம் படத்தை பார்த்தனர். இரண்டாவது தடவையாக தமிழகத்திலும் படத்தை பார்க்க அவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இதற்கிடையில் படம் ரிலீஸ் விவகாரத்தில் கமல், விநியோகஸ்தர்கள் இடையே சில சர்ச்சைகளும் உருவாகியுள்ளன. விஸ்வரூபம் படத்தை அட்வான்ஸ் அடிப்படையில் தியேட்டர்களில் திரையிட கமல் நடவடிக்கை எடுத்து இருந்தார். ஆனால் சில விநியோகஸ்கர்கள் தியேட்டர் அதிபர்களிடம் மினிமம் கியாரண்டி முறையில் தியேட்டர் உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் போட்டு படத்தை திரையிட முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதன் மூலம் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையை குறைத்து காட்ட முடியும் என்றும் இதனால் கமலுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறினார். கமல் அனைத்து தியேட்டர்களுக்கும் பிரதிநிதிகளை அனுப்பி கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
நன்றி மாலை மலர் 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் பிப்-7-ந் தேதி ரிலீஸ்



கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் இப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா, முஸ்லிம் அமைப்பினரும் கமலஹாசனும் ‘விஸ்வரூபம்’ பட விவகாரத்தில் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண அரசு உதவும் என அறிவித்தார்.

இதையடுத்து சென்னை கோட்டையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கோர்ட்டில் போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்போவதாகவும் கமல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஸ்வரூபம் படத்தை திரையரங்கில் வெளியிடும் தேதியை கமல் இன்று அறிவித்தார். அதன்படி, விஸ்வரூபம் வருகிற 7-ந் தேதி தமிழகத்தில் வெளியாகிறது. இப்படம் வெளியாக உறுதுணையாக இருந்த தமிழக முதலமைச்சருக்கும், முஸ்லீம் சமுதாய மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் கமல் நன்றி தெரிவித்துள்ளார். 

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் 'சூப்பர் ஹிட்' -ஐங்கரன்



விஸ்வரூபம் திரைப்படத்துக்கு அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு அனைத்து மாவட்டங்களிலும் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் விஸ்வரூபம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக அப்படத்தை அந்த நாடுகளில் விநியோகம் செய்துள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஸ்வரூபம் மட்டுமே உலக அளவில் தற்போது பெருமளவில் பேசப்பட்டு வரும் ஒரே தமிழ்ப் படமாகும். இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் திரையிடப்பட்டது. 

தற்போது 2வது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளுடன் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய அளவில் இப்படத்துக்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் மட்டும் இப்படம் மொத்தம் 30 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. பல தியேட்டர்களில் தினசரி 9 காட்சிகள் வரை திரையிடுகின்றனர். காரணம், ரசிகர்களின் கூட்டம் மற்றும் கோரிக்கை காரணமாக. கமல்ஹாசன் படம் ஒன்று இங்கிலாந்தில் இந்த அளவுக்கு பிரமாண்ட வரவேற்பைப் பெற்றிருப்பது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிச் செய்தியாகும். ரசிகர்களின் கோரிக்கை காரணமாக இந்த வாரம் கூடுதலாக 8 திரைகள் விஸ்வரூபத்தை திரையிடவுள்ளன. 

 ஐரோப்பிய நாடுகளிலும், இங்கிலாந்திலும் விஸ்வரூபம் சூப்பர் ஹிட் படமாகியுள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.