வியாழன், 13 டிசம்பர், 2012

ஏர்டெல் டி.டி.எச் இல் விஸ்வரூபம்

எதிர்வரும் ஜனவரி 11-ந்தேதி கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளிவருகிறது. இதை தியேட்டர்களில் திரையிடப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே ஏர்டெல் டி.டி.எச்-ல் காண முடியும் என கமல்ஹாசன் தரப்பு தெரிவித்துள்ளது.

கமல் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' தியேட்டர்களில் வெளியிடப்படும் அதே நாள் டி.டி.எச் இலும் ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு வெளியானது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படிச் செய்வதின் நோக்கம் திருட்டு  டிவிடி ஐ ஒழிப்பதுதான் என கமல்ஹாசன் கூறினார்.
இதனை தியேட்டர் அதிபர்கள் ஏற்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர். கமல்ஹாசனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டாடா ஸ்கை, ஏர்டெல், ரிலையன்ஸ், வீடியோகான் உள்பட பிரபலாமன டி.டி.எச் நிறுவனங்கள் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப ஆர்வம் காட்டின. இதனால் கடும் போட்டி நிலவியது.
இறுதியாக டி.டி.எச். ஒளிபரப்பு உரிமையை ஏர்டெல் நிறுவனம் வாங்கியது. எனவே வீடுகளில் ஏர்டெல் டி.டி.எச். வைத்திருப்பவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் வீடுகளில் உள்ள டி.வி.க்களில் கண்டு களிக்கலாம்.
ஏர்டெல் டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே விஸ்வரூபம் படம் ஒளிபரப்பு இணைப்பு கிடைக்கும்.
சுமார் 150 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட விஸ்வரூபம் படமானது உள்நாட்டு டி.டி.எச். நிறுவனங்களைத் தவிர மலேசியாவின் ஆஸ்ட்ரோ, சிங்கப்பூரின் பிரபல சிஸ் டெல், வளைகுடா நாடுகளின் இரண்டு டி.டி.எச் நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரபல டி.டி.எச். நிறுவனங்களுடனும் கமல்ஹாசன் தற்போது பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறார்.


திங்கள், 10 டிசம்பர், 2012

கமலின் கருத்துக்கு பிரியானி தயார்: முஸ்லீம் லீக்


உலக நாயகனின் விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி முஸ்லிம் அமைப்புக்கள் சில எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று கமல் ஹாசன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக காட்சிகள் இடம்பெறவில்லையாயின் ஜாதி மதம் பாராமல் பத்தாயிரம் ஏழைக் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே முஸ்லிம் லீக் அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்த முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவர் ஜவாஹிர் அலி கருத்து வெளிடுகையில், சகோதரர் கமலஹாசன் தயாரித்து நடித்து வெளிவரும் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் இப்படத்தைப் பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதில் வருதப்படுவார்கள் என கூறியுள்ளார்.

'ஹேராம்' மற்றும் 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளிவந்தபோதும் இப்படியே கூறினார். ஆனால் அத்திரைப்படங்களில் இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் வசனங்களும் காட்சிகளும் அமைந்திருந்தது. ஆனால் அச்சமயம் எங்களுக்குள் வலுவான ஒற்றுமை இல்லாததினால் பெரிய அளவில் எங்களின் எதிர்ப்புகளை காட்டவில்லை.

ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மிகப் பெரிய வலுவான ஒற்றுமையும் உணர்வும் வந்திருப்பதால் முஸ்லிம்களை காயப்படுத்தும் வசனங்களோ, காட்சிகளோ எந்த திரைப்படத்தில் இடம் பெற்றாலும் அதை எதிர்க்க தயங்க மாட்டோம்.

'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாமல் இருந்தால் சகோதரர் கமலஹாசன் கூறுவதுபோல் அவர் முன்னிலையில் ஏழைகள் பத்தாயிரம் பேருக்கு பிரியாணி வழங்க இந்திய தேசிய முஸ்லீம் லீக் தயாராக உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

விஸ்வரூப பிரச்சினையும் கமலின் விளக்கமும்

விஸ்வரூபம் படம் பற்றிய சர்ச்சை தீயாக பற்றிக்கொண்டுள்ள இந்த நேரத்தில் அதை பற்றிய விளக்க கட்டுரை ஒன்று எமுத வேண்டும் என்றிருந்த நேரத்தில் தலைவரின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அவரின் அளவிற்கு எனது விளக்கம் தெளிவாக இருக்காது என்பதால் கமலின் அறிக்கையை அப்படியே வெளியிடுகிறேன்.


DTH ஒரு புதிய பரிணாமம்:

புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும்கூட உலக வழக்கம்.

உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம் மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்’ என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.

ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்… உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்க வைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை.

ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
இந்த DTH என்பது என்ன? எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.

சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH. இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று. என் படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு வி.ரூ வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?
DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தியேகக் காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.

விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

DTH வசதி தமிழக ஜனத்தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.

7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரி கொண்டு போவதைத் தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள DVDக் காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.

திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம் கெடும் என்று எதிர்த்துத் தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது. பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ள ஒரு பக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திர்கும் வீட்டில் மின் விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?

முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

-கமல் ஹாசன்

இதன் பிறகாவது இந்த கூட்டம் திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கில்லை இருந்தாலும் எம்மை போன்ற ஒரு சிலராவது புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இதை வெளியிடுகிறேன்.