வியாழன், 7 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம்




விஸ்வரூபம்... தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே உச்சரிக்கும் சினிமா.

கமலஹாசன் என்ற தமிழ் நடிகர் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கிய சர்வதேச படம். இந்திய உளவுப்பிரிவான 'ரா' அமைப்பின் அதிகாரி தலிபான் தீவிரவாதி வேடத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களின் ரகசிய திட்டங்களை அறிந்து அவற்றை தடுப்பதோடு அமெரிக்கா மீது தலிபான்கள் நடத்த இருந்த தாக்குதலையும் முறியடிப்பதே கதை...

அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் படமாக்கி தீவிரவாதிகளின் நடவடிக்கைகள், அவர்களின் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் விளைவுகளை கற்பனை கலந்து பிரமாண்டமாய் எடுத்துள்ளார் கமல்.

படத்தின் ஆரம்பம் அமெரிக்காவில் தொடங்குகிறது. கமலஹாசன் 'கதக்' நாட்டிய கலைஞர். அமெரிக்க பெண்களுக்கு நாட்டியம் கற்று கொடுக்கும் ஆசிரியராக இருக்கிறார். பெண்மை கலந்த நளின நடை, ஆண்மையை வெளிகாட்டாத கதாபாத்திரமாக காட்சி அளிக்கிறார்.

இவரது மனைவி பூஜாகுமார். அமெரிக்காவில் உள்ள அணு மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். கமல்-பூஜா இருவரும் கணவன்-மனைவி என்றாலும் அந்தரங்க உறவுகள் எதுவும் நடப்பதில்லை. இது மனைவி பூஜாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கணவனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதால் தன்னை தொட தயங்குகிறாரோ? என்று எண்ணுகிறார். இதை கண்டுபிடிக்க துப்பறியும் நிபுணரை நியமிக்கிறார். அவர் கமலஹாசனை பின் தொடர்கிறார். அப்போது கமலஹாசன் உண்மையில் ஒரு நடன கலைஞர் இல்லை என்பதும் அவர் ஒரு முஸ்லிம் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.

இதற்கிடையே அமெரிக்காவில் அணு கதிர்கள் மூலம் தாக்குதல் நடத்த தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டு அதற்கான காய் நகர்த்தல்களில் ஈடுபடுகின்றனர். இதற்காக அமெரிக்காவின் அணு விஞ்ஞானிகளை தேடி அலைந்தபோது, அவர்களின் கையில் கமலஹாசனை துப்பறிந்த நிபுணர் சிக்கிக் கொள்கிறான். அவனிடம் இருக்கும் ஆவணங்கள் மூலம் கமலஹாசனின் மனைவி பூஜாகுமார் ஒரு அணு விஞ்ஞானி என்பதை தெரிந்து கொண்ட தீவிரவாதிகள் துப்பறியும் நிபுணரை சுட்டுக்கொன்று கமலஹாசனையும் பூஜாகுமாரையும் தங்களது ரகசிய இடத்திற்கு கடத்தி செல்கிறார்கள்.

அங்கு பூஜாகுமாரிடம் அணு ரகசியங்களை கேட்கிறார்கள். அவர் சொல்ல மறுக்கவே தீவிரவாதிகள் சித்ரவதை செய்கிறார்கள். இதை பார்த்ததும் கமல் கொதித்து எழுகிறார். அங்கிருந்த தீவிரவாதிகளை அடித்து நொறுக்குகிறார். அவரது ஆக்ரோஷமான சண்டையை பார்த்ததும் மனைவிக்கு பிரமிப்பு... நடன கலைஞராக இருந்த கமலுக்குள் இப்படி ஒரு மறுபக்கமா? என வியப்படைகிறார்.

அதன் பின்புதான் கமல் யார்? என்ற உண்மை அவருக்கு தெரிய வருகிறது. அது படத்தின் 'பிளாஷ்பேக்' கதையாக விரிகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘ரா’ அதிகாரி கமல், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைகிறார். அங்கு முல்லா உமரை சந்திக்கிறார். கமலின் திறமைகளை பார்த்த முல்லா உமர் இளம் தலிபான்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணராக கமலை நியமிக்கிறார்.

உருது மொழி தெரியாத கமல், பயிற்சி பெறும் சக வீரர்களிடம் கேட்டு அங்கு உள்ள தலிபான் தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறார். ஆப்கான் தீவிரவாதிகள் புறாக்களின் கால்களில் அணுக்கதிர்களை பதுக்கி அமெரிக்காவின் நியூயார்க் நகர் மீது மிகப்பெரிய அணுக்கதிர் தாக்குதல் நடத்த திட்டமிடும் தகவல் தெரிய வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாளும் ஆப்கானிஸ்தானில் இருந்து புறாக்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது.

போதுமான அணுக்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதும் அங்கு தாக்குதல் நடத்த வேண்டிய தலிபான்களும் அமெரிக்கா செல்கிறார்கள். இந்த தகவல் அமெரிக்காவின் உளவுப்படையான எப்.பி.ஐ.க்கு தெரிகிறது. மிரண்டு போன அவர்கள் நேட்டோ படைகள் மூலம் ஆப்கானிஸ்தான் மீது வான்வெளி தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் அங்கிருந்த முல்லா உமரை தவிர மற்ற தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள். முல்லா உமர் மட்டும் அமெரிக்காவுக்கு ரகசியமாக தப்பிச் செல்கிறார்.

இதுபோல கமலும் அமெரிக்காவுக்கு செல்கிறார். அங்கு எப்.பி.ஐ.யின் கையில் கமல் சிக்குகிறார். கமல் இந்தியாவின் 'ரா' அதிகாரி என்று இந்திய தூதரக அதிகாரிகள் எப்.பி.ஐ.க்கு தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் கமல் தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்காவை தகர்க்க என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளனர் என்பதை விவரிக்கிறார். அவர்கள் அந்த திட்டங்களை கமலுடன் சேர்ந்து தகர்த்து முறியடிக்கிறார்கள். தலிபான்களின் திட்டம் தோற்கடிக்கப்படுகிறது. அமெரிக்கா காப்பாற்றப்படுகிறது. அத்துடன் படம் முடிகிறது.

வணக்கம் போடுவதற்கு முன்பு முக்கிய தீவிரவாதியான முல்லா உமர் அமெரிக்காவை விட்டு தப்பிச் செல்கிறார். இவர் அடுத்து செய்யப்போகும் அதிரடிகள் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகும் என்ற அறிவிப்புடன் படம் முடிகிறது.

விஸ்வரூபம் படத்தில் 3 பாடல்கள் வருகிறது. கதக் கலைஞர்கள் பாடும் பாடலாக ஒன்றும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும்போது அதன் பின்னணியில் இசைக்கும் பாட்டாகவும், கமல் எதிரிகளை துவம்சம் செய்யும்போது பாடும் பாடலாகவும் உள்ளது.

படத்தின் பிரமாண்டம் படம் தொடங்கிய 25-வது நிமிடத்தில் நடக்கும் சண்டைக் காட்சி. வில்லன்களுடன் கமல் மோதுவது இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத விசித்திரமான சண்டை... இதை இன்னொரு முறை பார்க்க மாட்டோமா? என்று ரசிகர்களை நிச்சயம் துடிக்க வைக்கும். அதை உணர்ந்த இயக்குனர் கமல் அந்த சண்டைக்காட்சியை கதாநாயகி பூஜா மீண்டும் எண்ணிப்பார்ப்பதுபோல உருவாக்கி காட்சிப்படுத்தி உள்ளார்.

படத்தின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் அதன் ஒளிப்பதிவு... ஹாலிவுட் படங்களில் மட்டுமே கண்டு வந்த பிரமாண்ட காட்சிகள் விஸ்வரூபத்திலும் காண கிடைப்பது தமிழ் ரசிகர்களுக்கு மற்றொரு பரிசு. இசையை சங்கர்- ஹசான்-லாய் ஆகியோர் கூட்டாக செய்துள்ளனர்.

ஆப்கானையும், தலிபான்களையும் இவ்வளவு நுணுக்கமாக எந்த படத்திலும் பார்த்ததில்லை. நியூயார்க் நகரின் பிரமாண்டம் பிரமிக்க வைக்கிறது. புறா காட்சிகள் விறுவிறுப்பு. கமல் ஆக்ஷன், ஸ்டைலில் கலக்குகிறார். ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பம் காட்சிகளை நிஜப்படுத்துகிறது.

மொத்தத்தில் ‘விஸ்வரூபம்’ தமிழர்கள் பெருமைப்படும் வகையில், உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் சினிமா....

 நன்றி மாலைமலர் 





1 கருத்து: